Tuesday 31 December 2013

அடிமாடுகள் சொல்கின்றன

நாங்கள்
நரப் பூச்சிகளின்
நன்றி மறுப்பால்
அறுப்புக்குப் போகும்
அடிமாடுகள்

வயதான ஒருவன்
நோய் வந்த நண்பன்
பால் வறண்ட ஒருத்தி
முடமான முரடன்
நகரும் பொட்டலமாய்
சாகுமிடம் நோக்கி
நான்கு நாட்கள்
நீரில்லாமல்
நின்றபடி பயணம்
கால் தோய்ந்து
சாய்ந்து கொள்ள
சக மாட்டு முதுகுகள்
வயிறு காயும்
முதல் நாள் மட்டுமே
மலஜலம் அவதி
உழைப்பை உண்ட பின்
உடம்பையும் கூறு கேட்டாய்
பால் மட்டும் போதாதென்று
உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்
செத்தும் கொடுக்கிறோம்
சுவைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எங்கள்
மரணப் பயணத்தை
சிறிதேனும்
மரியாதைப் படுத்துங்கள்
போன ஆண்டு பொங்கலுக்கு
பொட்டிட்டுப் பூ வைத்து
கடவுளாய் படையல் இட்ட
நீயே வெட்டி இருந்தால்
நிம்மதியாய் செத்திருப்பேன்


--முகநூல் வழி கிடைத்த கவிதை 


No comments:

Post a Comment